இந்த செப்டம்பர் மாதத்தில் தான் கார்ல் மார்க்ஸ் தனது மூலதனம் புத்தகத்தின் முதல் தொகுதியை வெளியிட்டார். அவர் எழுதிய ஏராளமான அரசியல் பொருளாதார கட்டுரைகள் மூலதனமாயிற்று. உலகில், அதுவரை இது போன்ற புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், அவை ஒருபக்க சார்பானவை. முதலாளித்துவம் நீடித்திருக்க எழுதப்பட்டவை.
மாமேதை கார்ல் மார்க்ஸ் மட்டுமே பாட்டாளி வர்க்க விடுதலையை அறிவியல் கண்ணோட்டத்தில் கண்டு, அதன் உழைப்பை எப்படியெல்லாம் முதலாளித்துவம் உறிஞ்சுகிறது என்பதை உலகுக்கு முதன்முதலில் விளக்கிச் சொன்னார். அதுவே மூலதனம் ஆயிற்று.
இன்று உலகில், மானுட விடுதலைக்காக போராடும் எவரும் மார்க்சின் மூலதனத்தை படிக்காமல் நடைமுறையில் நிற்க முடியாது.
சுரண்டலை புரிந்து கொள்ள வேண்டுமானால், அதன் ஆணிவேரை அறிந்திருக்க வேண்டும். அப்போது தான் அதை வேரறுக்க முடியும்.
முதலாளித்துவ பொருளாதாரம் சரக்கு உற்பத்தியில் இருக்கிறதென்றால், அந்த உற்பத்திக்கு அடித்தளமான மனித உழைப்பை பற்றியும் அதன் உபரி மதிப்பு பற்றியும் நாம் அறியாவிட்டால் சுரண்டலற்ற பாட்டாளி வர்க்க பொருளாதாரத்தை கட்டியமைக்க இயலாது.
கூலி என்றால் என்ன? ஒவ்வொரு பொருளுக்கான விலை நிர்ணயம் எப்படி செய்யப்படுகிறது? லாபம் முதலாளிக்கு எப்படி கிடைக்கிறது? என்பதையெல்லாம் நிச்சயம் ஒவ்வொரு பாட்டாளியும் மானுடத்தை நேசிப்பவர்களும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
முதலாளித்துவ அறிஞர்கள் சரக்கு விற்பனை சந்தையில் லாபத்தை தேடினார்கள். மார்க்ஸ் மட்டும் தான் மனித உழைப்பு சுரண்டலில் அதை கண்டறிந்தார். மானுடத்தின் குறிப்பாக பாட்டாளி வர்க்கத்தின் அறிவுப் பொக்கிஷம் மூலதனம் 1867 செப்டம்பர் 14ந்தேதி அதன் முதல் தொகுதி வெளியிடப்பட்டது.
– தோழர் பாரதிநாதன்
#daskapital #karlmarx #surplusvalue #exploitation